திங்கள், 10 செப்டம்பர், 2012

பொய் பேசுவது அழிவுக்கு வழி வகுக்கும்.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

قُتِلَ الْخَرَّاصُونَ {10}

10. பொய்யர்கள் அழிவார்கள்.


பொய் பேசுவது அழிவுக்கு வழி வகுக்கும்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்று நம்மில் பலர் பொய் பேசுவதை சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளனர். பொய் பேசுவதனால் ஏற்படும் இம்மை,மறுமை இழப்புகளை அறிந்திருந்தால் பொய் பேசுவதை விபரீதமான காரியம் என்று எடுத்துக் கொள்வார்கள்.

உலக வாழ்வை வளப்படுத்திக் கொள்வதற்காக பல நிலைகளில் பொய் பேசுவர் அவைகளில் சில:
  • பொய் பேசுவது வணிகத்தில் ஓர் அங்கம் போல் கருதி சிலர் பொய் பேசி வியாபாரம் செய்வர்,
  • பிறர் தன்னை உயர்வாக கருத வேண்டும் என்பதற்காக கடந்த கால சில நிகழ்வுகளை மிகைப்படுத்திப் பொய் பேசுவர் அல்லது நடக்காத ஒன்றையே நடந்தது போல் இட்டுக் கட்டுவர்,
  • தன்னை சுற்றி இருக்கக் கூடியவர்கள் சிரிக்க வேண்டும் என்பதற்காக தேவை இல்லாமல் பொய் பேசி சிரிக்க வைப்பர்,
  • சில தாய்,தந்தையர் பிள்ளகளை சமாதானப் படுத்த வேண்டும் என்பதற்காக செய்து கொடுக்க முடியாததை செய்து தருவதாகக் கூறி பொய் பேசுவர்
  • ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமனத்தை முடித்து வை என்று யாரோ சொன்னதை வேத வாக்கு போல் எண்ணி ஆயிரத்துக்கும் அதிகமான பொய்களை பேசி பொருத்தமில்லாத ஜோடிகளுக்கு திருமனம் செய்து வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் பலர்.
  • தன்னைத் தவிற வேறு யாருக்கும் தெரியாது என்கின்ற தைரியத்தில் கணவில் காணாததைக் கண்டதாகக் கூறி பொய் பேசுவர் சிலர்,
  • சிலர் நெருக்கடியான நிலையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பொய் பேசுவர்,
இது போன்று இன்னும் ஏராளமான சந்தர்ப்பங்களில் பொய் பேசுவதை வழமையாகக் கொண்டுள்ளதை அடுக்கிக்கொண்டேப் போகலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொய் பேசி சமாளித்ததை திறமையாக நினைத்து பலர் சந்தோஷப்படுபவது உண்டு தன்னுடன் நெருக்கமானவர்களிடம் கூறி எப்படி சமாளித்தேன் தெரியுமா ?  நான் பேட்டப் போட்டில் மேல்படியார் திக்குமுக்காடி விட்டார், செய்வதறியாது திகைத்துப் போய் விட்டார் என்றுக் கூறி மகிழ்வதும் உண்டு. ஆனால் இது அவர்களுடைய மனசாட்சியை அறவே உறுத்துவதில்லை.

  • இதெல்லாம் ஒரு மேட்டரே அல்ல  என்று இவர்கள் நினைக்கின்றனரா ? !
  • அல்லது இதற்காக இறைவன் நம்மை குற்றம் பிடிக்க மாட்டான் என்றுக் கருதுகின்றனரா ?
  • அல்லது இது விஷயமாக இஸ்லாத்தில் பெரிய அளவிலான தடை எதுவும் இல்லை என்றுக் கருதுகின்றனரா ?
  • அல்லது இதற்கான மறுமை தண்டனை சொல்லும் அளவுக்கு பெரிதாக இல்லை என்றுக் கருதுகின்றனரா ?

பொய் பேசுவதை தடை செய்த அறிவிப்புகள் திருமறைக் குர்ஆனிலும், நபி(ஸல்) அவர்களுடைய பொண் மொழிகளிலும் ஏராளமாக நிறைந்து காணப்படுவதை பூரணமாக ஒருவர் அறிந்தால் அவருடைய வாழ் நாளில் ஒரு தடவைக் கூட பொய் பேசத் துணிய மாட்டார்.

உலக வாழ்வில் ஏற்படும் இழப்புகள்.
ஒருவர் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அல்லது அதிக அளவீலான லாபத்தை ஈட்டிக் கொள்வதற்காக, ஒருப் பொய்யை சொல்லிப் பெரும் தொகையை  அடைந்து கொள்ளலாம்.

பிறிதொரு காலத்தில் அல்லது அப்பொழுதே அது பொய் என்று மக்களுக்கு தெரிய வந்தால் அதன் பிறகு அவர் பல சந்தர்ப்பங்களில் நூற்றுக்கு நூறு உண்மையைப் பேசினாலும் அவன் ஒரு பொய்யன் அவனைப் பற்றித் தெரியாதா ? என்று மக்கள் பேசும் நிலை உருவாகும். 

அவர் உண்மை பேசும் போது அது  மக்களிடம் எடுபடாத நிலை உருவாகிப் போய் விடும்.

அவர் செல்வ செருக்குடன் வாழ்பவராக இருந்தாலும், உயர் பதவியில் அங்கம் வகிப்பவராக இருந்தாலும் பொய்யர் என்றப் பட்டம் அவருடைய இமேஜை உடைத்து நாசமாக்கி விடும்.

மது, மாது, சூது போன்ற இன்னும் ஏராளமான கெட்டப் பழக்கங்களிலிந்து மனிதன் தவ்பா செய்து திருந்தி வட்டால் அவர்  திருந்தி விட்டார் என்று மக்கள் அடையாளம் கண்டு கொள்வர்.

ஆனால் பொய்யர் திருந்தினாலும் மக்கள் பார்வையில் பொய்யராகவே அடையாளம் காணப்படுவார்.

இழந்த பின் திரும்பப் பெற முடியாததில் பொய் பேசியதால் இழந்த இமேஜை திரும்பப் பெறுவது கடினம்.


மறுமை வாழ்வில் ஏற்படும் இழப்புகள்.
நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் எங்களை நோக்கி, 'இன்றிரவு உங்களில் யாரும் கனவு கண்டீர்களா?' என்று கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். எவரேனும் கனவு கண்டு அதைக் கூறினால், 'அல்லாஹ் நாடியது நடக்கும்' எனக் கூறுவார்கள்.

இவ்வாறே ஒரு நாள், 'உங்களில் யாரும் இன்றிரவு கனவு கண்டீர்களா?' என்று கேட்டதும் நாங்கள் இல்லை என்றோம். அவர்கள், 'நான் இன்றிரவு ஒரு கனவு கண்டேன்; அதில் இருவர் என்னிடம் வந்து என்னுடைய கைகளைப் பிடித்து என்னைப் புனித பூமியொன்றுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே ஒருவர் உட்கார்ந்திருந்தார். நின்றிருந்த இன்னொருவரின் கையில் இரும்பாலான கொக்கிகள் இருந்தன. அவர் அதைக்கொண்டு உட்கார்ந்திருப்பவரின் கீழ்த்தாடையின் ஒருபுறம் குத்த அது அவரின் பிடரி வழியாக வெளியேறியது. இப்படியே தாடையின் இன்னொரு புறமும் செய்தார். இதற்குள் தாடையின் முதற் பகுதி ஒழுங்காகி விட்டது. பின்பு இது குத்தப்பட்டதும் அது பழைய நிலையை அடைந்தது. உடனே நான் இது யார் என்று கேட்டேன்... அவர் பெரும் பொய்யர். அவர் பொய் பேச அது பலர் வழியயாக உலகம் முழுவதையும் அடையும். நீர் பார்த்த அத்தண்டனை அவருக்கு மறுமை நாள் வரை  கொடுக்கப்படும்...1386. ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவித்தார்.

மேற்காணும் தண்டனை ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோடு மட்டும் நிறுத்தப்படுவதில்லை அல்லது ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோடு மட்டும் கொடுத்து விட்டு நிறுத்தப்படுவதில்லை அவ்வாறே தொடர்ச்சியாக மறுமை நாள் வரை நீடிக்கும் மறுமையின் மீது உறுதியான நம்பிக்கை கொண்ட மக்கள் பொய் பேசுவதைப் பற்றி இதன் பிறகாவது நிதானமாக சிந்துத்துக் கொள்ளட்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

அழகிய முன்மாதிரி
முதலில் உலக மக்கள் அனைவரும் பின் பற்றி ஒழுக வேண்டிய அளவுக்கு அழகிய மாதிரியைக் கொண்ட அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் முன் மாதிரிகளில் பொய் பேசிய நிகழ்வு எப்பொழுதாவது நடந்துள்ளதா ? பின் எங்கிருந்து இந்தக் கெட்ட முன்மாதிரியை எடுத்தனர் ?. 

அண்ணல் அவர்களை உண்மையாளர் என்று உலக முஸ்லீம்கள் நம்பியதை விட அவர்கள் மூலம் அல்லாஹ் அனுப்பிய சத்திய மார்க்கத்தை வெறுத்தவர்களும் இறுதி வரை அதை ஏற்க மறுத்தவர்களும் கூட அண்ணல் அவர்கள் பொய் பேச மாட்டார்கள், பேசியதில்லை என்பதை உறுதியுடன் நம்பினர்.

இஸ்லாத்தை மறுத்து இறுதிவரை இஸ்லாத்தை ஏற்காமல் மரணித்த உமய்யாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

...முஹம்மத்(ஸல்) அவர்கள் உன்னைக் கொல்லவிருப்பதாகச் சொல்ல கேட்டிருக்கிறேன்'' என்று உமய்யாவிடம் (முஆது ரலி அவர்கள்) கூறினார்கள். அதற்கு அவன், 'என்னையா (கொல்ல விருப்பதாகக் கூறினார்?)'' என்று கேட்டான். ஸஅத்(ரலி), 'ஆம் (உன்னைத் தான்)'' என்று பதிலளித்தார்கள். அவன், 'அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மது பேசினால் பொய் பேசுவதில்லை'' என்று சொல்லிவிட்டு தம் மனைவியிடம் சென்று, 'என்னிடம் என் யஸ்ரிப் (மதீனா) நகர தோழர் என்ன கூறினார்?' என்று வினவினாள். 'முஹம்மது என்னைக் கொல்லவிருப்பதாகச் சொன்னதாக அவர் கூறினார். என்று அவன் பதிலளித்தான். அவள், 'அப்படியென்றால் (அது உண்மையாகத்தானிருக்கும்.) அல்லாஹ்வின் மீதாணையாக! முஹமமது பொய் சொல்வதில்லை'' என்று சொன்னாள். மக்காவாசிகள் பத்ருப் போருக்குப் புறப்பட்டுச் செல்ல, போருக்கு அழைப்பவர் வந்(து மக்களை அழைத்)தபோது உமய்யாவிடம் அவனுடைய மனைவி, 'உம் யஸ்ரிப் நகரத் தோழர் சொன்னது உமக்கு நினைவில்லையா?' என்று கேட்டாள். எனவே, (பயத்தின் காரணத்தால்) அவன் போருக்குப் புறப்பட விரும்பவில்லை.  அபூ ஜஹ்ல் அவனிடம், 'நீ (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்களில் ஒருவன். எனவே, (நீயே போரில் கலந்து கொள்ளாமல் போய்விட்டால் நான்றாக இருக்காது.) ஒரு நாளைக்கு அல்லது இரண்டு நாட்களுக்காவது போ(ய்க் கலந்து கொள்)'' என்று சொன்னான். அவ்வாறே அவனும் (இரண்டு நாள்களுக்காகச்) சென்றான். (அப்படியே அவன் போர்க்களம் வரை சென்று விட, அங்கே) அல்லாஹ் அவனைக் கொன்றுவிட்டான்.(ஹதீஸ் சுருக்கம்) அப்துல்லாஹ் இப்னு மஸ்¥த்(ரலி) அறிவித்தார் புகாரி: 3632.

முஸ்லீமல்லாதவர்களின் உள்ளங்களிலும் கூட முஹம்மது(ஸல்) அவர்கள் பொய் பேச மாட்டார்கள் என்பதை எந்த அளவுக்கு ஆழமாகப் பதித்து விட்டு சென்றார்கள் என்பதற்கு மேற்காணும் சம்பவம் உலகம் முடியும்; காலம் வரை சான்றுப் பகர்ந்து நிற்கிறது.

சானுக்கு சான், முழத்துக்கு முழம் முஹம்மது(ஸல்) அவர்களுடைய உண்மை பேசும் முன் மாதிரியைப் பின்பற்றி ஒழுக வேண்டிய சமுதாயம் இன்று பொய் பேசுவதில் சானுக்கு சான், முழத்துக்கு முழம் யாரைப் பின் பற்றுகின்றனர் ?


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்